கராச்சி: தவறுகளில் இருந்து பாகிஸ்தான் பாடம் படிக்காததால், ஒரு கத்துக்குட்டி அணியிடம் ஒயிட்வாஷ் ஆகியுள்ளது... என்று பாக். முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா விமர்சித்துள்ளார். பெரும்பாலும் சர்வதேச ஆட்டங்களில் விளையாடிய அனுபவமில்லாத அறிமுக வீரர்களுடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியிடம், பாகிஸ்தான் ஒருநாள் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்து ஒயிட்வாஷ் ஆனது. இதை பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் ரமீஸ் ராஜா, சோயிப் அக்தர் உள்பட பலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.ரமீஸ் ராஜா இது குறித்து கூறியதாவது: பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கும், ரசிகர்களுக்கும் இது வேதனையான கடினமான நாள். அதுவும் கத்துக்குட்டி அணியான பி டீமிடம் ஒயிட்வாஷ் ஆகியுள்ளது. பாகிஸ்தான் அணி தவறுகளில் இருந்து பாடம் படிக்கவில்லை.வீரர்கள் மனரீதியாக சோர்வடைந்து விட்டனர். முதல் ஆட்டத்தில் கிடைத்த தோல்வியால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து அவர்கள் இன்னும் மீளவில்லை. கத்துக்குட்டி அணியால் அவர்கள் தோற்கடிக்கப்பட்டது மறுநாள் தலைப்பு செய்தியானது. அது அவர்களை அழுத்தத்திற்குள்ளாக்கி விட்டது. அதனால் அடுத்தடுத்து தவறுகள் செய்தனர்.இதை சரி செய்ய அணியில் மாற்றம் அவசியம். இளம் கேப்டனான பாபர் ஆசம் அவர் அடித்த 150 ரன்னுக்காக தலைப்பு செய்திகளில் இடம் பெற மாட்டார். ஒருங்கிணைந்து விளையாடி அணி வென்றால் மட்டுமே அது தலைப்பு செய்தியாகும். அதை உணர்ந்து கேப்டன் செயல்பட வேண்டும். பெரிய மாற்றங்களுக்கு தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு ரமீஸ் விமர்சித்துள்ளார்.
from Dinakaran.com |15 Jul 2021 https://ift.tt/2U8MMac
via IFTTT
0 Comments