கொழும்பு: இந்திய அணியுடனான 2வது டி20 போட்டியில், இலங்கை அணிக்கு 133 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. கொழும்பு, ஆர்.பிரேமதாசா ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடைபெற இருந்த இப்போட்டி, இந்திய அணி ஆல் ரவுண்டர் க்ருணால் பாண்டியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து ஒத்திவைக்கப்பட்டு நேற்று நடைபெற்றது. டாசில் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அந்த அணியில் ரமேஷ் மெண்டிஸ் அறிமுகமானார். இந்திய அணியில் சேத்தன் சகாரியா, தேவ்தத் படிக்கல், நிதிஷ் ராணா, ருதுராஜ் கெயிக்வாட் ஆகியோர் முதல் முறையாக சவதேச டி20ல் அறிமுக வீரர்களாக இடம் பெற்றனர். ருதுராஜ், கேப்டன் ஷிகர் தவான் இருவரும் இந்திய இன்னிங்சை தொடங்கினர்.இந்த ஜோடி 7 ஓவரில் 49 ரன் சேர்த்து நல்ல தொடக்கத்தை கொடுத்தது. ருதுராஜ் 21 ரன் எடுத்து ஷனகா பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் பானுகா வசம் பிடிபட்டார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தவான் 40 ரன் எடுத்து (42 பந்து, 5 பவுண்டரி) அகிலா தனஞ்ஜெயா பந்துவீச்சில் கிளீன் போல்டானார். தேவ்தத் படிக்கல் 29 ரன் எடுத்து (23 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த சஞ்சு சாம்சன் 7 ரன், நிதிஷ் ராணா 9 ரன் மட்டுமே எடுத்து வெளியேறி ஏமாற்றமளித்தனர். இந்தியா 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 132 ரன் குவித்தது. புவனேஷ்வர் 13 ரன், நவ்தீப் சைனி 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 133 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.
from Dinakaran.com |29 Jul 2021 https://ift.tt/3f5vYsb
via IFTTT
0 Comments