ஜோதிடம்

டோக்கியோ: பாரா ஒலிம்பிக் மகளிர் துப்பாக்கிசுடுதலில் முந்தைய உலக சாதனையை சமன் செய்த அவனி லெகரா (19 வயது), நடப்பு தொடரில் இந்தியாவுக்காக முதல் தங்கத்தை வென்றதுடன் பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் வசப்படுத்தி உள்ளார். டோக்கியோவில் நேற்று காலை  மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் (ஆர்2) துப்பாக்கிசுடுதல் போட்டிக்கான தகுதிச்சுற்று ஆட்டம் நடந்தது.  அதில் பாரா ஒலிம்பிக் தகுதிச்சுற்றுப் போட்டியில் அதிக புள்ளிகள் குவித்த சாதனையுடன் சீனாவின் குயிபிங் ஜாங்,  உக்ரைன் வீராங்கனை இரினா  செச்ட்னிக் இருவரும் தலா 626 புள்ளிகள் குவித்து முதல் 2 இடங்களை பிடித்தனர். அவர்களுடன் சேர்த்து 8 வீராங்கனைகள் பைனலுக்கு  முன்னேறினர். அவனி லெகரா 621.7 புள்ளிகளுடன்  7வது இடம் பிடித்தார்.தொடர்ந்து நண்பகலில் நடந்த பைனலில் அபாரமாக செயல்பட்ட அவனி   249.6 புள்ளிகள் குவித்து முதல் இடம் பிடித்தார். அதன் மூலம் தங்கம் வென்ற அவனி முந்தைய உலக சாதனையையும் சமன் செய்தார்.  பெல்கிரேடில் 2018ல் நடந்த சர்வதேச பாரா துப்பாக்கிச்சுடும் போட்டியில் உக்ரைன் வீராங்கனை இரினா செச்ட்னிக்கும் 249.6 புள்ளிகளை  குவித்திருந்தார். ஆனால் அவர் இந்த முறை 227.5புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்து வெண்கலம் வென்றார். 248.9 புள்ளிகள் பெற்ற குயிபிங் (சீனா) வெள்ளிப் பதக்கத்தை வசப்படுத்தினார். பாரா ஒலிம்பிக் தொடங்கி ஒரு வாரம் ஆன நிலையில், அவனி மூலம் இந்தியா முதல் தங்கத்தை சுட்டது.கார் விபத்து மூலம் வாழ்க்கையே மாறிப்போனாலும், ஜெய்பூரைச் சேர்ந்த  அவனி டோக்கியோவில் சாதித்துக் காட்டியிருக்கிறார்.  அவர்  நாளை  10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு  பிரிவு, செப்.3ம் தேதி 50மீ ஏர் ரைபிள் கலப்பு பிரிவு, கடைசி நாளான செப்.5ம் தேதி  50 மீட்டர் மகளிர் ஒற்றையர் பிரிவு ஆகியவற்றில் பங்கேற்க உள்ளதால், இந்தியாவின் பதக்க எண்ணிக்கை  அதிகரிக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.



from Dinakaran.com |31 Aug 2021 https://ift.tt/3mL0xaZ
via IFTTT

Post a Comment

0 Comments