டாக்கா: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஆண்கள் ஹாக்கி போட்டித் தொடரில், இந்திய அணி 3வது இடத்துக்கான மோதலில் பாகிஸ்தானை கடுமையாகப் போராடி வென்று வெண்கலப் பதக்கம் பெற்றது. வங்கதேசத்தில் நடைபெற்று வந்த இத்தொடரில், நடப்பு சாம்பியனான இந்தியா அரையிறுதியில் ஜப்பானிடம் 3-5 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. இதையடுத்து, 3வது இடத்துக்காக பாகிஸ்தானுடன் நேற்று மோதியது. மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில் இந்தியா 4-3 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றியை வசப்படுத்தி வெண்கலப் பதக்கத்தை முத்தமிட்டது. இந்தியா சார்பில் ஹர்மான்பிரீத் (1வது நிமிடம்), சுமித் (45’), வருண் குமார் (53’), அக்ஷ்தீப் (57’) கோல் அடித்தனர். பாக். தரப்பில் அப்ராஸ் (10’), அப்துல் ராணா (33’), அகமது நதீம் (57வது நிமிடம்) கோல் போட்டனர். கொரியா சாம்பியன்: இறுதிப் போட்டியில் தென் கொரியா - ஜப்பான் மோதிய ஆட்டம் 3-3 என டிராவில் முடிந்த நிலையில், பெனால்டி ஷூட் அவுட் கடைப்பிடிக்கப்பட்டது. அதில் தென் கொரியா 4-2 என்ற கோல் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஜப்பான் வெள்ளிப் பதக்கம் பெற்றது.
from Dinakaran.com |23 Dec 2021 https://ift.tt/3ssuT4Z
via IFTTT
0 Comments