துபாய்: சூதாட்ட தரகர்கள் தன்னை அணுகியது குறித்து உடனடியாக தகவல் தரத் தவறிய ஜிம்பாப்வே அணி முன்னாள் கேப்டன் பிரெண்டன் டெய்லருக்கு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மூன்றரை ஆண்டு தடை விதித்துள்ளது. கடந்த அக். 2019ல் தன்னை சந்தித்த இந்தியாவை சேர்ந்த ஒரு தொழிலதிபர் மற்றும் சூதாட்ட தரகரிடம் இருந்து ‘ஸ்பாட் பிக்சிங்’ செய்வதற்காக 15,000 டாலர் டெபாசிட் பெற்றதாகவும், சொல்வதை செய்தால் மேற்கொண்டு 20,000 டாலர் தருவதாக அவர்கள் கூறியதாகவும் பிரெண்டன் டெய்லர் (35 வயது) சமீபத்தில் தெரிவித்திருந்தார். தான் ஸ்பாட் பிக்சிங் அல்லது மேட்ச் பிக்சிங்கில் ஈடுபடவில்லை என்று அவர் தெரிவித்து இருந்தாலும், இந்த சம்பவம் குறித்து உடனடியாக தகவல் தராமல் தாமதம் செய்ததற்காக அவருக்கு மூன்றரை ஆண்டு தடை விதிக்கப்படுவதாக ஐசிசி நேற்று அறிவித்தது. அந்த சந்திப்பின்போது கொகெய்ன் போதை மருந்து உட்கொண்டதையும் டெய்லர் ஒப்புக்கொண்டதால் அவர் அதற்காக மேலும் ஒரு மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
from Dinakaran.com |29 Jan 2022 https://ift.tt/3IMYTO4
via IFTTT
0 Comments