ரங்கியோரா: மகளிர் உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில், இந்திய அணி 81 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது. ஐசிசி மகளிர் உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடர் நியூசிலாந்தில் நாளை மறுநாள் தொடங்குகிறது. இதில் பங்கேற்க உள்ள 8 அணிகளிடையே பயிற்சி ஆட்டங்கள் நடந்து வருகின்றன. இந்தியா தனது முதல் பயிற்சி ஆட்டத்தில் தென் ஆப்ரிக்காவை 2 ரன் வித்தியாசத்தில் போராடி வென்றது. அடுத்து ரங்கியோராவில் நேற்று வெஸ்ட் இண்டீசை எதிர்கொண்டது. டாஸ் வென்று பேட் செய்த இந்தியா 50 ஓவரில் 258 ரன் குவித்து ஆல் அவுட்டானது. பவுன்சர் பந்து தாக்கிய அதிர்ச்சியில் இருந்து மீண்ட மந்தனா அபாரமாக விளையாடி 66 ரன் (67 பந்து, 7 பவுண்டரி) விளாசினார். தீப்தி ஷர்மா 51 ரன் (64 பந்து, 1 பவுண்டரி), யஸ்திகா 42, கேப்டன் மிதாலி 30 ரன் எடுத்தனர். இதையடுத்து, 259 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. இந்திய வீராங்கனைகளின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய அந்த அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 177 ரன் மட்டுமே எடுத்து 81 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அதிகபட்சமாக ஷீமைன் கேம்ப்பெல் 63, ஹேலி மேத்யூஸ் 44 ரன் எடுத்தனர். இந்திய தரப்பில் பூஜா 3, மேக்னா, ராஜேஸ்வரி, தீப்தி தலா 2 விக்கெட் எடுத்தனர்.நியூசிலாந்துக்கு எதிராக சமீபத்தில் நடந்த தொடரில் தொடர்ந்து 4 ஆட்டங்களில் தோற்ற இந்திய மகளிர் கடைசி ஆட்டத்தில் ஆறுதல் வெற்றி பெற்றனர். இப்போது 2 பயிற்சி ஆட்டங்களிலும் வென்றுள்ளது, இந்திய ரசிகர்களுக்கு உற்சாகத்தையும், புதிய எதிர்பார்ப்பையும் கொடுத்துள்ளது. நியூசி. வெற்றி: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று நடந்த பயிற்சி ஆட்டத்தில், நியூசிலாந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. ஆஸி. 49.3 ஓவரில் 321 ரன் ஆல் அவுட்; நியூசி. 43.1 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 325 ரன் (பேட்ஸ் 63, கேப்டன் சோபி டிவைன் 161*, அமிலியா கெர் 92*).
from Dinakaran.com |02 Mar 2022 https://ift.tt/8RFQdCx
via IFTTT
0 Comments