புதுடெல்லி: அரியானாவை சேர்ந்த ராணுவ வீரரான நீரஜ் (24வயது), கடந்த ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஈட்டி எறிதலில் தங்கம் வென்று உலகின் பார்வையை இந்தியா பக்கம் திரும்ப வைத்தார். சமீபத்தில் நடந்த டைமண்ட் லீக் தொடரிலும் சாதித்து காட்டினார். சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்றாலும், இத்தொடரில் 19 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்காக பதக்கம் வென்ற வீரர் என்ற சாதனையை படைத்தார். இடுப்பு வலியால் அவதிப்படுவதால் தான் அவர் தங்கம் வெல்ல முடியாமல் போனதாக தகவல் வெளியானது. இங்கிலாந்தில் நாளை தொடங்கும் காமன்வெல்த் போட்டியில் நீரஜ் பங்கேற்க இருந்த நிலையில், ஸ்கேன் பரிசோதனையில் அவருக்கு இடுப்பு பகுதியில் காயம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஒரு மாதம் கட்டாயம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதை அடுத்து, ‘டாக்டர்கள் ஆலோசனையின்படி, காமன்வெல்த் போட்டியில் நடப்பு சாம்பியன் நீரஜ் பங்கேற்க மாட்டார்’ என்று இந்திய ஒலிம்பிக் சங்க பொதுச் செயலர் ராஜீவ் மேத்தா தெரிவித்துள்ளார். இதனால் இந்தியாவின் பதக்க வேட்டையில் துரதிர்ஷ்டவசமாக ஒரு தங்கம் கை நழுவியுள்ளது.
from Dinakaran.com |27 Jul 2022 https://ift.tt/15OrDQg
via IFTTT
0 Comments