பிரிட்ஜ் டவுன்: அமெரிக்காவில் நடைபெறும் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில், நட்சத்திர வீரர் ரபேல் நடால் அதிர்ச்சி தோல்வியடைந்தார். குரேஷியாவின் போர்னா கோரிக்குடன் (25வயது, 152வது ரேங்க்) 2வது சுற்றில் மோதிய நடால் (35வயது, 3வது ரேங்க்) 6-7 (7-9), 6-4, 3-6 என்ற செட் கணக்கில் 2 மணி, 51 நிமிடம் போராடி தோல்வியைத் தழுவினார். விம்பிள்டன் ஓபனில் அரையிறுதிக்கு முன்னேறியும், காயம் காரணமாக விளையாடாமலேயே நடால் வெளியேறினார். சில வாரங்கள் ஓய்வுக்கு பிறகு மீண்டும் களமிறங்கிய போட்டியில் போராடி தோற்றாலும், யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் தொடரில் அவர் மற்ற வீரர்களுக்கு சவாலாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. நம்பர் 1 வீரர் டானில் மெத்வதேவ் (ரஷ்யா), கார்லோஸ் அல்கராஸ் (ஸ்பெயின்), ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் (கிரீஸ்), கேமரான் நோரி (இங்கிலாந்து), ஜான் ஐஸ்னர் (அமெரிக்கா) ஆகியோர் 3வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். இகா வெற்றி: மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் நேரடியாகக் களமிறங்கிய நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக்(21 வயது, போலந்து), 6-4, 7-5 என நேர் செட்களில் அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்சை (29 வயது, 57வது ரேங்க்) வீழ்த்தினார். நடப்பு சீசனில் அவர் பெற்ற 50வது வெற்றி இது. அதில் 39 ஆட்டங்களில் நேர் செட்களில் வென்றுள்ளார். 6 ஆட்டங்களில் மட்டுமே தோற்றுள்ளார். ஒரே சீசனில் 50+ வெற்றி பெற்றவர்கள் பட்டியலில் ஆஷ்லி பார்டி 56 வெற்றிகளுடன் (ஆஸ்திரேலியா) முதல் இடத்தில் இருக்கிறார். சானியா முன்னேற்றம்: மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா - லூசி ராடெக்கா (செக் குடியரசு) இணை 1-6, 6-3, 11-9 என்ற செட் கணக்கில் கரோலின் கார்சியா (பிரான்ஸ்) - பெத்ரா மார்டிச் (குரேஷியா) இணையை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறியது.
from Dinakaran.com |19 Aug 2022 https://ift.tt/Wo9aEUN
via IFTTT
0 Comments