சிட்னி: ஆஸியில் நடக்கும் ஆடவர் டி20 உலக கோப்பையின் சூப்பர் 12 சுற்றில் 2வது பிரிவில் உள்ள இந்தியா-நெதர்லாந்து அணிகள் களம் கண்டன. டாஸ் வென்று களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ராகுல் 9 ரன்னில் நடுவரின் தவறான கணிப்பால் ஆட்டமிழந்தார். ஆனாலும் கேப்டன் ரோகித் 53(39பந்து, 4பவுண்டரி, 3சிக்சர்) ரன் விளாசி ஸ்கோர் உயர உதவினார். அடுத்து களம் கண்ட கோஹ்லி 62(44பந்து, 3பவுண்டரி, 2சிக்சர்), சூரியகுமார் 51(25பந்து, 7 பவுண்டரி, 1சிக்சர்) ரன் வெளுத்து கடைசி வரை களத்தில் இருந்தனர். இப்படி 3வீரர்கள் அடுத்தடுத்து விளாசிய அரைசதங்களால் இந்தியா 20ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 179ரன் எடுத்தது. நெதர்லாந்து தரப்பில் கிளாஸ்சன், மீகெரன் இருவரும் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். தொடர்ந்து 180ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து களம் கண்டது. புவனேஸ்வர் தனது முதல் 2 ஒவர்களை மெய்டனாக வீசியதுடன், ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார். இந்திய பந்து வீச்சை சமாளிக்க தடுமாறினாலும் 20ஓவர் வரை களத்தில் நின்ற நெதர்லாந்து 9 விக்கெட்களை இழந்து 123 ரன் எடுத்தது. அதனால் இந்திய அணி 56 ரன் வித்தியாசத்தில் 2வது வெற்றியை பதிவு செய்தது. நெதர்லாந்து அணியில் அதிகபட்சமாக டிம் பிரிங்கள் 20(15பந்து, 1பவுண்டரி, 1சிக்சர்) எடுத்தார். இந்திய தரப்பில் அஷ்வின், புவனேஸ்வர், அர்ஷதீப், அக்சர் தலா 2விக்கெட்களும், ஷமி ஒரு விக்கெட்டும் எடுத்தனர். இந்தியா தனது 3வது ஆட்டத்தில் நாளை மறுநாள் தென் ஆப்ரிக்காவை எதிர்கொள்கிறது.
from Dinakaran.com |28 Oct 2022 https://ift.tt/Z5Wb0mn
via IFTTT
0 Comments