சென்னை: இந்தியா வந்துள்ள வங்கதேசம் லெவன் ஆடவர் அணி தமிழ் நாடு அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் அரங்கில் நடக்கும் இந்த தொடரில் முதல் ஆட்டத்தில் 11ரன் வித்தியாசத்திலும் 2வது ஆட்டத்தில் 50ரன் வித்தியாசத்திலும் தமிழ்நாடு வெற்றிப் பெற்றது. இந்நிலையில் 3வது ஆட்டம் நேற்று நடந்தது. முதல் 2 ஆட்டங்களில் விளையாடிய வீரர்களுக்கு பதிலாக முழுவதும் புது வீரர்களுடன் தமிழ்நாடு களம் கண்டது. கேப்டன் உட்பட பலர் வெளிமாநில வீரர்கள். அதே போல் வங்கதேச அணியிலும் மாற்றங்கள் இருந்தன. ஆஸியில் நடக்கும் உலக கோப்பையில் விளையாடிய அனமுல் ஹக் பிஜாய் உட்பட சர்வதேச ஆட்டங்களில் விளையாடிய வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டு இருந்தனர்.டாஸ் வென்று களமிறங்கிய வங்கதேசம் 48.4ஓவரில் 220 ரன்னுக்கு ஆட்டமிழந்தது..அந்த அணியில் அதிகபட்சமாக தவ்ஹித் ஹ்ரிதய் 64, அனமுல் ஹக் 42 ரன் எடுத்தனர். தமிழ் நாடு தரப்பில் திரிலோக் நாத் 3, அஜித் ராம், மோகன் பிரசாத் தலா 2 விக்கெட் எடுத்தனர். தொடர்ந்து களம் கண்ட தமிழ்நாடு 47.4ஓவரில் எல்லா விக்கெட்களையும் இழந்து 201ரன் மட்டுமே எடுத்தது. அதனால் 19ரன் வித்தியாசத்தில் தமிழ்நாடு முதல் தோல்வியை சந்தித்து. அந்த அணியில் பிரதோஷ் 70, டாரியல் 40 ரன் எடுத்தனர். வங்கம் தரப்பில் காலித் அகமது, முகமது சாயிப், தைஜூல் இஸ்லாம், மோமினுல் ஹக் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர். மொத்தம் 4 ஆட்டங்கள் கொண்ட தொடரில் தமிழ்நாடு 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்க கடைசி ஆட்டம் இன்று நடைபெற உள்ளது.
from Dinakaran.com |11 Nov 2022 https://ift.tt/ngEzfq5
via IFTTT
0 Comments