கிங்ஸ்டன்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது டெஸ்டில் பாகிஸ்தான் அணி நிதானமாக விளையாடி ரன் சேர்த்து வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் இடையிலான 2வது டெஸ்ட் கிங்ஸ்டன் சபினா பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற வெ.இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. அபித் அலி, இம்ரான் பட் இருவரும் பாகிஸ்தான் இன்னிங்சை தொடங்கினர். அபித் அலி 1 ரன்னில் வெளியேற, அடுத்து வந்த அசார் அலி டக் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். இருவரும் ரோச் வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்தனர். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் இம்ரான் பட் தன் பங்குக்கு 1 ரன் மட்டுமே எடுத்து ஜேடன் சீல்ஸ் பந்துவீச்சில் நடையைக் கட்ட, பாகிஸ்தான் 3.5 ஓவரில் 2 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து அதிர்ச்சி தொடக்கத்தை சந்தித்தது.எனினும், கேப்டன் பாபர் ஆசம் - பவாத் ஆலம் ஜோடி 4வது விக்கெட்டுக்கு பொறுப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இந்த ஜோடி 158 ரன் சேர்த்திருந்தபோது, 76*ரன்னில் இருந்த ஆலம் காயம் காரணமாக வெளியேறினார். பாபர் 75 ரன் (174 பந்து, 13 பவுண்டரி) விளாசி ரோச் வேகத்தில் ஹோல்டர் வசம் பிடிபட்டார். போதிய வெளிச்சம் இல்லாததால் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்த நிலையில் (74 ஓவர்), பாகிஸ்தான் 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன் எடுத்திருந்தது. முகமது ரிஸ்வான் 22, பாகீம் அஷ்ரப் 23 ரன்னுடன் களத்தில் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரோச் 3, சீல்ஸ் ஒரு விக்கெட் எடுத்தனர்.
from Dinakaran.com |22 Aug 2021 https://ift.tt/380dJ3t
via IFTTT
0 Comments