செயின்ட் கிட்ஸ்: இந்திய அணியுடனான 2வது டி20 போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டிரினிடாடில் இருந்து செயின்ட் கிட்ஸ் வந்த இந்திய வீரர்களின் விளையாட்டு உபகரணங்கள் உள்பட முக்கிய பொருட்கள் அடங்கிய பைகள், பெட்டிகள் வந்து சேர்வதில் தாமதம் ஆனதால், இந்த போட்டி 2 மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது. எனினும் ஓவர்களின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீச, ஒபெத் மெக்காய் வீசிய முதல் பந்திலேயே கேப்டன் ரோகித் கோல்டன் டக் அவுட்டானார்.மெக்காய் வேகத்தை சமாளிக்க முடியாமல் அடுத்து வந்த வீரர்களும் அணிவகுப்பு நடத்த, இந்தியா 19.4 ஓவரில் 138 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஹர்திக் 31, ஜடேஜா 27, பன்ட் 24 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் மெக்காய் 4 ஓவரில் 1 மெய்டன் உள்பட 17 ரன் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் அள்ளினார். ஹோல்டர் 2, ஜோசப், அகீல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 19.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 141 ரன் எடுத்து வென்றது. தொடக்க வீரர் பிராண்டன் கிங் 68 ரன், டிவோன் தாமஸ் 31* ரன் விளாசி வெற்றிக்கு உதவினர். மெக்காய் ஆட்ட நாயகன் விருது பெற்றார். மொத்தம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, 3வது போட்டி நேற்று இரவு 9.30க்கு தொடங்கி நடைபெற்றது.
from Dinakaran.com |03 Aug 2022 https://ift.tt/6Np2gPk
via IFTTT
0 Comments